குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டக் களத்தில் இறக்கிவிட்ட மக்கள்...ஏன்?
அரியலூர்
தனியார் சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்ற்ச் செல்லும் லாரிகளால் குடிநீர் மாசு அடைவதை தடுக்க குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பெரியபட்டாக்காடு கிராமப் பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சுரங்கத்திலிருந்து திருச்சியில் இயங்கிவரும் தனியார் சிமெண்டு ஆலைக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் கல்லக்குடி கிராமத்தின் வழியாக இயக்கப்பட்டது.
இவ்வாறு செல்லும் லாரிகள் மூலம் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும், லாரிகள் செல்லும்போது ஏற்படும் புழுதியால் குடிதண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பெரிதும் வீணாவதாகவும் கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக லாரிகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் கல்லக்குடி வழியாக காவல் பாதுகாப்புடன் மீண்டும் சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அந்தப் பகுதியில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் சத்திய நாரா யணன் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர், அந்த வழியாக லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டதால் மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.