ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததால் மக்கள் ஆத்திரம்; நகராட்சி அலுவலகம் முற்றுகை...
நீலகிரி
ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி 1, 2 வார்டுகளில் மேல்கூடலூர், ஓ.வி.எச்.சாலை, கோக்கால், ஊட்டி ரோடு, கே.கே. நகர், பாரதி நகர், ஆசிரியர் காலனி, சொரக்காபட்டணம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். அதன்பிறகும் குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள், நகராட்சி அலுவலக நுழைவு வாசல்படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் முழக்கமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், நகராட்சி ஆணையாளர் வெளியூர் சென்றதால், வேறு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "கடந்த மார்ச் 1-ஆம் தேதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை.
நகராட்சி லாரியில் சில பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உணவு சமைக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, முறையாக குடிநீர் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
அப்போது நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், "தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் நகராட்சி லாரியில் குடிநீர் வழங்குவதாகவும், லாரி செல்ல முடியாத இடத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீர் நீர்தேக்க தொட்டியில் விடப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும். இல்லை என்றால் 10 வீடுகள் வீதம் கணக்கீட்டு லாரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு ஏரியா வீதம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் சுமார் 1.30 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.