பெண்ணை கொடூரமாக தாக்கிய ஏடிஎஸ்பிக்கு வலுக்கும் எதிர்ப்பு - சமூக வலைதளவாசிகளின் நடவடிக்கையால் 'நாட்-ரீச்சபிள்'
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெண்ணை கொடூரமாக தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் சரமாரியாக தடியடி நடத்தினர். இதில், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கொடூரமாகத் தாக்கியது தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியவர்கள் தாக்கப்பட்டதும், அப்பாவி பெண்ணை ஏடிஎஸ்பி தாக்கியதும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎஸ்பி அறைந்ததால் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஏடிஎஸ்பி-க்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலிமை குறைந்த பெண்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியா? என்று, சமூகவலைதளங்களான முகநூல், வாட்ஸ்-அப், ட்விட்டரில் ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஏடிஎஸ்பி பாண்டியராஜனின் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு அவரிடம் நியாயம் கேளுங்கள் என்றும் ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அவரை பலரும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனர். சமூகவலைதளவாசிகளின் குடைச்சலால் ஏடிஎஸ்பி-யின் செல்போன் ‘நாட்-ரீச்சபிள்’ நிலையை அடைந்துவிட்டது.