தென் பெண்ணையாறு பிரச்சனை தொடர்பாக ஒரு மாதத்தில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றின் குறுக்கே மார்க்கண்டேய நதி போன்ற கிளை ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2019ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தென் பெண்ணையாறு பிரச்சனை

ஆனால் நடுவர் மன்றம் அமைக்காத மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம், ஓர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழுவை 2020-ல் அமைத்தது. இந்த குழுவும் நடுவர் மன்றத்தை ஜல்சக்தி அமைச்சகம் அமைக்கலாம் என பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு நடுவர் மன்றம் அமைப்பதை தாமதித்து வந்தது. இதன்பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து தென் பெண்ணையாறு பிரச்சனையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ந‌டுவர் மன்றம் அமைப்பதை காலம்தாழ்த்திய மத்திய அரசு

இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதமும் எழுதியது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மத்திய அரசு ந‌டுவர் மன்றம் அமைப்பதை எந்த முகாந்திரமும் இல்லாமல் தாமதப்படுத்தியதல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை குழு அமைக்க கேட்டுக்கொண்டது. உச்சநீதிமன்றத்தின் 23.01.2024 தேதியிட்ட ஆணையின்படி 2வது பேச்சுவார்த்தைக் குழுவை, ஜல்சக்தி அமைச்சகம் 07.02.2024 அன்று அமைத்தது.

2வது பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தை தோல்வி

2வது பேச்சுவார்த்தைக் குழு, பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பதை தனது இறுதி 30.09.2024 அன்று ஜல்சக்தி பரிசீலனைக்காக சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் அமைச்சகத்தின் ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைப்பதை மேலும் தாமதித்து வந்ததால் 08.09.2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கினை விரைவில் விசாரிக்க கோரப்பட்டது.

மத்திய அரசுக்கு உத்தரவு

இந்த நிலையில் இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 2) விசாரித்த உச்ச நீதிமன்றம் பெண்ணையாறு பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஒருமாத காலத்திற்குள் ஒரு நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கூறியபடி நடுவர் மன்றத்தை விரைவில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

''பெண்ணையாறு மற்றும் அதன் கிளை நதியான மார்கண்டேயா நதி குறித்த பிரச்சனைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்துள்ளதன் விளைவாக உச்சநீதி மன்றத்தில் இன்று நல்ல தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றுமென தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்குமென எதிர்பார்க்கிறேன்.

மேலும், இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து விரைவில் பெண்ணையாறு மற்றும் மார்கண்டேயா நதிநீரை பெற்று, குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைகளுக்காக நம்பியுள்ள மக்களின் நலன்களை பாதுகாக்கும்'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.