ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவை இளைஞருக்கு சசிகலா பாராட்டு…
ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவை இளைஞருக்கு சசிகலா பாராட்டு…
கோவையைச் சேர்ந்த இளைஞர் கிரண்பட், Industrial Light and Music என்ற தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு The Academy of Motion picture Arts and Science நிறுவனம் இந்த ஆண்டுக்கான தொழில் நுட்பத்திற்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் திரை உலகின் மிக உயரிய விருதாக போற்றப்படும் "ஆஸ்கார்" விருதின் சிறந்த தொழில்நுட்பப் பணிக்கான விருது இந்த ஆண்டு தங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்து பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் வல்லுநர் தான் மேற்கொண்ட துறையில் இத்தனை பெரும் சிறப்பினை பெற்றிருக்கிறார் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரங்கில் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறும்போதெல்லாம் அவர்களை உளமாற வாழ்த்தி மகிழ்ந்தவர் ஜெயலலிதா என்றும், அவர் வழியில் நடைபோடும் அதிமுக சார்பில் தங்களுக்கு இந்த இனிய தருணத்தில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, இன்னும் பல பரிசுகளும், பாராட்டுகளும் தங்களுக்கு வந்தடைய வாழ்த்துவதாகவும் சசிகலா தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.