அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், புதிய குழு அமைத்துள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய திட்டம் - குழு அமைத்த தமிழக அரசு

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஊதிய திட்டம், பங்களிப்பு திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 309-ல் “ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலன்” என்ற தலைப்பின்கீழ் 'புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 44 மாதங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

ஊழியர்களை ஏமாற்றும் செயல்

இந்தச் சூழ்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் நிதித் துறை உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினை தி.மு.க. அரசு அமைத்துள்ளது.

 பழைய ஒய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம், மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது என்பதே அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். இது மட்டுமல்லாமல், அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஓய்வூதியத் திட்டம் என்றால், பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதுதான் அதன் பொருள். இது தேவையற்ற ஒன்று. மேற்படி மூன்று திட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திடுக

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சி அமைத்து 44 மாதங்கள் கடந்த நிலையில் 'எது சிறந்த திட்டம்' என்று ஆராய குழு அமைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. ஆட்சி தொடங்கியதிலிருந்து, பொருளாதார வல்லுநர் குழு ஆரம்பித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் இதுபோன்றதொரு குழுவை அமைத்திருப்பது அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயல்.

எனவே உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதனை அப்படியே 2003-க்கு பின் சேர்ந்தவர்களுக்கும் நடைமுறைப்படுத்த எந்தக் குழுவும் அவசியம் இல்லை என்பதால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதாக ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.