ஆன்லைன் ரம்மிக்கு தடை.?பரிந்துரை குழு அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு.! அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
ஆன் லைன் சூதாட்டத்தால் தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. ஏராளமானோர் தங்களது அனைத்து வருமானங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்து சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
குழு அமைத்த தமிழக அரசு
இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், நடவடிக்கைகளை ஆராய இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பிப்பு
இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு தமிழக முதலமைச்சரை இன்று சந்தித்து வழங்கியது. இதனையடுத்து இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர அமைச்சரை ஒப்புதல் அளிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..?அடுத்த அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இபிஎஸ் அணி