அரியலூர் முழுவதுக்கும் ஒரே ஒரு அரசு கல்லூரி; சீட்டுக்காக போட்டிபோடும் மாணவர்கள்! பெற்றோர்கள் கோரிக்கை...
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர் போட்டி போடுவதால் ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் சீட்டு ஒதுக்க வேண்டும் என்றனர் பெற்றோர்கள்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ - மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ - மாணவிகள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கும், நாளை தமிழ், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாது காவலருடன் கல்லூரிக்கு வரவேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். மேலும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே அரசு கலைக் கல்லூரி இது என்பதால் ஏராளமான மாணவ - மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வருகின்றனர். இதில் பலருக்கு இடம் கிடைக்காததால் ஏமாற்றுத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, தமிழக அரசானது ஒவ்வொரு பாட பிரிவிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்கி ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.