ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும்வரை போராட்டம் தொடரும் – கதிராமங்கலத்தில் 37-வது நாளாக மக்கள் போராட்டம்…
தஞ்சாவூர்
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்று கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 37-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வனதுர்க்கை அம்மன் கோவில் பகுதியில் இருந்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது காவலாளர்கள் தடியடி நடத்தினர். இதையடுத்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து மக்கள் பலவிதமான போராட்டங்களை நாள்தோறும் நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் கடந்த 12-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் 10 பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், கதிராமங்கலத்தில் இ்ருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்று கிராம மக்கள் நேற்று 37-வது நாளாக ஐயனார் கோவில் திடலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சென்னை மனிதி அமைப்பினர் சந்தித்துப் பேசினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்கேயே விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.