Nutritional Employees Association Demonstration for Maternity Leave With salary

பெரம்பலூர் 

270 நாள்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்.ஆனந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வள்ளியம்மை, சின்னதுரை, அஞ்சலை, வசந்தி, மாவட்ட இணை செயலர்கள் துரைசிங்கம், சித்ரா, மணிமேகலை, அயன்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆளவந்தார் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலர் ஆர்.சவிதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 

மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

பணிக்கொடையாக ரூ. 5 இலட்சம் வழங்க வேண்டும். 

8-வது ஊதியக்குழுவில் பிடித்தம் செய்த 21 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 

இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து, காப்பீடு வழங்க வேண்டும். 

270 நாள்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட துணைத் தலைவர் பி. தயாளன், கூட்டுறவு துறை சங்க மாவட்ட தலைவர் ப. சிவகுமார், வருவாய்த் துறை வருவாய் அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் ப. குமரி அனந்தன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினர் வி. கொளஞ்சி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ப. வெங்கடாஜலபதி நன்றி தெரிவித்தார்.