ntse exam dates postponed to nov 18
சென்னையில் மழை மீண்டும் பிடித்துக் கொண்டது. இன்று காலையில் வெறிச்சோடியிருந்த நிலையில், மாலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இன்று இரவு கன மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ள செய்தி அறிக்கையில், 4.11.2017 அன்று நடைபெறுவதாக இருந்த தேசியத் திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ), தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 18.11.2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் முன்னரே அறிவித்து நடத்த திட்டமிட்டுள்ள தேர்வுகள் எந்த மாற்றமும் இல்லாமல், திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்திருந்தார்.
இதனால், அண்ணா பல்கலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் சிரமப் படுவதாகவும், இது குறித்து அரசுதான் தலையிட்டு ஒரு முடிவினை அறிவிக்க வேண்டும் என்றும் முன்னர் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலை, சென்னை சட்டப் பல்கலை, பாலிடெக்னிக், பட்டயக் கணக்கர் (சிஏ) தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இவற்றின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
