தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 2017 ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

'தமிழகத்தில் 12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும், 12 ஆயிரத்து, 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17, 19ம் தேதி நடக்கும் என, செப்டம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இது குறித்த வழக்கு 2017 ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவிக்காலம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிசம்பர், 31ம் தேதி, இவர்களின் பதவிக்காலம் முடிகிறது.

இவர்களது பதவி காலத்தை நீட்டிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர் நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும்.

இதற்கிடையில், 'ஜனவரியில், பொங்கல், மார்ச் மாதத்தில், அரசு பொதுத்தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.