Notice to Meenakhi temple merchants to vacate shops today itself

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திலுள்ள கடைகளை இன்று காலை 11 மணிக்குள் காலி செய்யும்படி கோவில் நிர்வாகம் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 400 ஆண்டுகள் பழமையான வீரவசந்தராயர் மண்டபம் எரிந்து சிதலமடைந்தது. அந்த மண்டப மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீயினால் கற்துாண்களில் விரிசல் ஏற்பட்டது.

50 க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது, மேலும் பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்நிலையில் கோவில் வளாகத்திலுள்ள 115 கடைகளையும் இன்று காலை 11 மணிக்குள் காலி செய்யும்படி கோவில் இணை ஆணையர் நடராஜர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.



இந்த நோட்டீஸ் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைக்காரர்கள் நலச்சங்க தலைவர் ராஜநாகலு செய்தியாளர்களிடம் பேசும்போது, கோவில் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் கொடுத்தபின் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தற்போது கடைகளை உடனே அப்புறப்படுத்த சொன்னால் 500க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கோவில் வளாகத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கடைகள் வைக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.