சென்னைக்கு புயல் பயம் இல்லை …ஆனால் திரும்பவும் செம மழை இருக்கு….தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் நல்ல செய்தி !!!
டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்னையை சாகர் என்ற கடும் புயல் தாக்கக் கூடும் என்றும், அந்தமான் அருகே உருவாகியுள்ள அந்தப் புயலால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், புயல் வர வாய்ப்பில்லை என்றும் ஆனால் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறியது. இதற்கு ஒகி என பெயரிடப்பட்டது. இந்தப் புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 20000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுளளனர்.
தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயல் தற்போது குஜராத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அந்தமான் அருகே புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடுமையாக தாக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தமிழ்நாமு வெதர்மேன் இன்று சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்இ தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்தப் புயல் அப்படியே வலுவிழந்து ஆந்திரா பக்கம் திசைமாறி போய்விடும் என்றும், அதனால் சென்னைக்கு புயல் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆகையால் மக்களே பயப்பட வேண்டாம் …உங்களது அன்றாட வேலைகளை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், ஆனால் சென்னைக்கு ஒரு செம மழை காத்திருக்கு என கூறியுள்ளார்.
நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.