no new films does not release from 6th october

திரையரங்குகளில் 10 சதவீத கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 6 ஆம் தேதி முதல் புதிய திரைப்டங்களை வெளியிடமாட்டோம் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருட்டு விசிடி, கூடுதலாகி வரும் தயாரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக திரைப்படத் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி வரியால் தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 27 ஆம் தேதியன்று தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீத கூடுதல் கேளிக்கை வரி விதித்து அரசு உத்தரவிட்டது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், கேளிக்கை வரி பிரச்சனையில் அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை என கூறப்படுகிறது.

இப்பிரச்சனை தொடர்பாக சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி, கேளிக்கை வரியில் இருந்து தமிழ் திரைப்படங்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரத்தில் வரும் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.