தா.பழூர்,
மணல் குவாரியில் வாங்கும் மணலுக்கு செக் வேண்டாம், பணமாக கொடுத்தால் மட்டுமே வியாபாரம் என்று கராராக சொல்லிவிட்டனர் குவாரி நிர்வாகத்தினர். இதனால், லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தைச் சேர்ந்தது வாழைக்குறிச்சி. இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி இருக்கிறது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதுவரை, இந்த மணல் குவாரியில் வாங்கும் மணலுக்கு உரிய தொகையை லாரி ஓட்டுநர்கள் குவாரி நிர்வாகத்திடம் பணப் பட்டுவாடா மூலம் மட்டுமே செய்தனர்.
இந்த நிலையில் மோடியின் அறிவிப்பால், தற்போது வங்கியில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக, லாரி உரிமையாளர்கள் குவாரி நிர்வாகத்திடம் காசோலை வழங்கி வருகின்றனர். ஆனால், குவாரி நிர்வாகத்தினர், “காசோலை வேண்டாம், பணமாக கொடுங்கள்” என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் 20-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், குவாரியைச் சேர்ந்தவர்கள், “இதுகுறித்து மேலிடத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்”. இதையேற்று லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
