சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட ஊருக்கு பேருந்து வசதி இல்லை - நடவடிக்கை கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு...
சிவகங்கை
சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட நாட்டரசன்கோட்டை ஊருக்கு பேருந்துகள் இயக்க கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு வருவாய் அலுவலர் இளங்கோ தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை,
உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுதாரர்களுக்கு உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தில் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த செல்லம் என்பவர் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், "நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. மேலும், இந்த ஊரை தமிழக அரசு சுற்றுலா தலமாகவும் அறிவித்துள்ளது.
தற்போது நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில் தாலுகாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் காளையார்கோவில் தாலுகா அலுவலகம் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நாட்டரசன்கோட்டையில் இருந்து காளையார்கோவில் சென்று வர போதுமான பேருந்து வசதி கிடையாது.
ஏற்கனவே நாட்டரசன்கோட்டைக்கு வந்து சென்ற பேருந்துகளும் தற்போது இயக்கப்படுவதில்லை. எனவே, நாட்டரசன்கோட்டையில இருந்து காளையார்கோவிலுக்கு சென்றுவர வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.
மேலும், மதுரை – தொண்டி செல்லும் பேருந்துகள், நாட்டரசன்கோட்டை ஊருக்குள் சென்று வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.