சாப்பிட முடியல, தூங்க முடியல, டாக்டர்களுக்கே என்னானு தெரியல… நித்தியானந்தாவுக்கு என்னதான் ஆச்சு?
நித்தியானந்தா உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் தனது உடல்நிலை குறித்தும் தன்னை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
நித்தியானந்தா உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் தனது உடல்நிலை குறித்தும் தன்னை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நித்தியானந்தா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் என் ஹேட்டர்கள் நான் இறந்துவிட்டதாக பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம். சமாதியில் இருக்கிறேன், ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். இதுவரை என்னை சுற்றியுள்ள, மக்கள், அவர்களது பெயர்கள், ஊர்கள், மற்றும் நினைவுகள் முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.
இன்னும் கைலாசத்தின் அதிர்வுகள் மனநிலையில் அதிகமாக உள்ளது. சந்தேகிப்பவர்கள், புகைப்படங்கள் போலியானவை என நீங்கள் உணர்ந்தாலும், திருவண்ணாமலை அருணகிரி யோகேஸ்வர சமாதிக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள், நீங்கள் என்னைத் தெளிவாகப் பார்ப்பீர்கள். என்னைக் கண்காணித்து, ஆதரவு தந்து, உதவி செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தனது உடல்நிலை பற்றி நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். அதில், 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை.
பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.