நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் அதிகமாக பரவும் - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் எச்சரிக்கை...
இராமநாதபுரம்
நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் கே.செந்தில் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை வேல் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவருமான மருத்துவர் கே.செந்தில் கலந்துகொண்டார்.
அப்போது அவர்,, "நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான இரத்த பரிசோதனை முடிவுகளை சென்னையில் உள்ள மையத்துக்கு அனுப்பி, அதன் பின்னரே தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட மருத்துவமனைகளிலேயே உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும்.
நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக்கியமாக கைகளை முறையாக கழுவ வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமானவர்கள் தமிழகத்துக்கு வந்து கொண்டிருப்பதால் அவர்கள் மூலமாக நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதேபோல் சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் 2-வது இடத்திலும் உள்ளன.
மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் ஆகியவற்றில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.