“அடுத்தக் குறி அரசியல்வாதிகள் தான்…” - பொன்.ராதாகிருஷ்ணன் “பகீர்” பேச்சு
நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றும், 2 ஆயிரம் நோட்டினால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை மீட்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 500. 1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது திடீர் என அறிவித்ததால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இது திடீரென அறிவிக்கப்பட்டது அல்ல. மோடி அரசு பதவியேற்றவுடன், மக்கள் அனைவரும் வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 20 கோடி வங்கி கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அந்த ஜன்தன் கணக்குகளில் கூட 32 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் அதனை வெள்ளையாக்கும் வகையில் வங்கியில் டெபாசிட் செய்தால் கணக்கு கேட்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 65 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் ஆனது. இதனை தொடர்ந்து ஊழலுக்கு துணை போன வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், மாநிலத்திலேயே உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகுறி அரசியல்வாதிகள் தான். மக்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை தான் பிரதமர் மோடி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.