சென்னை மக்களே ரெடியா இருங்க … அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பின்னி எடுக்கப் போகுது !!
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த மழை மாலையில் மட்டுமே பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நெல்லை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. அதன் காரணமாக சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு மாலையில் மழை பெய்யும் என்று தெரிவித்தார். ஆனால் . இந்த மழை தென்மேற்கு பருவ மழை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களிலும், சில வட மாவட்டங்களிலும் காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்..\