ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை புயல் உருவாகும் என செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை புயல் உருவாகும் என செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது நாளை (08.05.2022) புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, 10 ஆம் தேதி அன்று ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 9 ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு,சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம். அதேநேரம், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை, இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. வேலூரில் 105.98 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. தஞ்சை, திருத்தணி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, தொண்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.