"100% உத்தமர்கள்" - அமைச்சருக்கு தனியார் பால் நிறுவனம் பதிலடி!
தமிழகத்தில் உள்ள சில தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த பாலின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தனியார் பால் நிறுவனங்களில்தங்களது பாலில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் ஆகிய வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
காஸ்டிக் சோடா, கெட்டுப் போன பாலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கிறது என்றும், இதனை பாலாக்காமல் பால் பவுடராக்கி விற்பனை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பால் பவுடரை வெந்நீரில் ஊற்றி பாலாக்கி கொடுக்கிறார்கள். இதனை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா என அத்தனை நோய்களும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் போட்டார்.
இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்ட பால் பவுடர் என அமைச்சர் குறிப்பிட்ட EVERY DAY என்ற பால் பவுடர் குறித்து நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களது EVERY DAY பால் பவுடர், 100 சதவீதம் தூய்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.EVERY DAY பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் போன்ற ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்றும் அது 100 சதவீதம் தூய்மையானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
EVERY DAY பால் பவுடர் தயாரிக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்யப்பட்டு, அது தூய்மையானது தானா என்பதை உறுதி செய்த பின்னர் தான் அந்த பால் பவுடர் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது வரை தாங்கள் நேர்மையான முறையில்தான் பால் பவுடரை தயாரிக்கு வருவதாகவும், எந்த ஒரு புகாரும் தங்கள் நிறுவனத்துக்கு இதுவரை வந்ததில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வாடிக்கையாளர்களுக்கு டுவிட்டர் பக்கம் மூலம் EVERY DAY பால் பவுடர் 100 சதசீதம் தூய்மையானது என விளக்கம் அளித்து வருகிறது.
EVERY DAY பால் பவுடர் குறித்து தவறாக வெளிவந்த இந்த செய்திக்கு நெஸ்லே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.