Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளி வைப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Negotiation with Transport employees postponed to february 7th smp
Author
First Published Jan 19, 2024, 5:01 PM IST | Last Updated Jan 19, 2024, 5:01 PM IST

போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம் உள்ளிட்டவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றன.  மேலும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி (இன்று) வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி இடத்தில் உதயநிதி: 2024இல் திமுக கோட்டையாகுமா கொங்கு மண்டலம்?

அதன்படி, சென்னை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.  தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெறற்ற  அந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்ற வழிகாட்டுதல் படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios