நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு !! தமிழக அரசின் அவசர சட்டம் மத்திய அரசிடம் இன்று தாக்கல்….
நீர் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தபின் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பிக்கவுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வின் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்த போதிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் நீர் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு இது குறித்து அவசர சட்டம் இயற்றினால் ஓர் ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், இதையடுத்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பிக்கவுள்ளார்.