- Home
- Tamil Nadu News
- இனி டிராபிக் கவலை இல்லை.. நாளை முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில்.. அட்டவணை என்ன?
இனி டிராபிக் கவலை இல்லை.. நாளை முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில்.. அட்டவணை என்ன?
வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தால் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் மக்கள் இனி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் 10-15 நிமிடங்களில் பரங்கிமலையை அடைய முடியும்

சென்னை புறநகர் ரயில்களின் முக்கியத்துவம்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் கைகொடுத்து வருகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை இருந்தாலும் புறநகர் ரயில்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் சேவையை வழங்கி வருகின்றன.
வேளச்சேரி-பரங்கிமலை புதிய வழித்தடம்
புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில்களால் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையே வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5 கிமீ தொலைவுக்கு ரூ.495 கோடி செலவில் பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், 4.5 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாக ரயில் பாதை அமைக்கப்பட்டது.
நாளை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும்
வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் நாளை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட பாதையில் ரயில்கள் வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே இயக்கப்படும். இது சென்னையின் முக்கிய போக்குவரத்து முனையமான பரங்கிமலை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையத்துடன் இணைவதால், பயணிகள் எளிதாக மற்ற இடங்களுக்கு மாற முடியும்.
அட்டவணை என்ன?
முதற்கட்ட தகவல்களின்படி, வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். அதாவது முதல் ரயில் அதிகாலை 5 மணியளவில் வேளச்சேரியில் இருந்து புறப்படும். கடைசி ரயில் இரவு 11:00 மணியளவில் பரங்கிமலையில் இருந்து புறப்படும். பீக் ஹவர்ஸில் ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 30 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிடும்.
புதிய வழித்தடத்தால் என்னென்ன பயன்கள்?
இந்த புதிய வழித்தடத்தால் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் மக்கள் இனி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் 10-15 நிமிடங்களில் பரங்கிமலையை அடைய முடியும். மேலும் பரங்கிமலையில் இறங்கி நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு அல்லது சென்ட்ரல் விரைவாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

