நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பிரதமரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி...
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நீட் தேர்வு நடத்தப்பட்டும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரி வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக பேச உள்ளதாக தெரிகிறது.
மேலும், துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.