Need to solve the problems of transport workers before the Pongal! Court instruction!
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை பொங்களுக்கு முன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களின் பிரச்சனையின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்காத தொழிற்சங்கங்கள், நேற்று மாலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களிலும் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை நாடி செல்கின்றனர். ஆனாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். ஆனால், கே.கே.ரமேஷின் முறையீட்ட ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது என்றும், பொங்களுக்கு முன் ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.
