நீலகிரியின் முதல் ஆட்சியர் பெயரில் இயற்கை சுற்றுலா மையம்; இன்றைய ஆட்சியர் திறந்து வைத்தார்...
நீலகிரி
பழங்குடியின மக்களின் கலாசாரத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்த நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஜான் சல்லிவன் பெயரில் இயற்கை சுற்றுலா மையத்தை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, ஜான் சல்லிவன் நினைவகம், கேத்தரின் நீர்வீழ்ச்சி லாங்வுட் சோலை, நேரு பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிந்த இடங்களாகும்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இயற்கை சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்துடன் நீலகிரி மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்ட ஆதிவாசி நலச்சங்கம், ஜான் சல்லிவன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இயற்கை சுற்றுலா தகவல் மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஜான் சல்லிவன் பெயரில் இயற்கை சுற்றுலா தகவல் மையம் நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் மருத்துவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம், குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், செயல் அலுவலர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தலைவர் பிச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயற்கை சுற்றுலா தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து பேசியது: "நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களை தவிர வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் தெரிவதில்லை.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பழமையான கலாசாரம் கொண்ட பழங்குடி கிராமங்கள், வனப்பகுதியில் ஆழகிய சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், பழங்குடியின மக்களின் கலாசாரத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்தவும் இயற்கை சுற்றுலா மையம் கோத்தகிரியில் தொடங்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி பகுதியில் உள்ள அரிய சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரியப்படுத்த மாணவர்கள், மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்குவதுடன், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுலா தலங்கள் குறித்து அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும்.
இதற்காக தேவைப்படும் உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில், கன்னேரிமுக்கு ஜான்சல்லிவன் அறக்கட்டளை நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவின் இறுதியில் ஆதிவாசி நலச்சங்க திட்ட அலுவலர் முத்துசாமி நன்றித் தெரிவித்தார்.