National Medicare Act will reduce the quality of medical care in 10 years - Doctors Union District Secretary warns ...

திருவண்ணாமலை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேசிய மருத்துவ ஆணை சட்டத்தால் இன்னும் 10 வருடங்களில் மருத்துவ தரம் குறைய வாய்ப்புள்ளது என்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலரும், மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளருமான ஸ்ரீதர் கூறினார்.

தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கத்தினர் நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, இந்திய மருத்துவ சங்கத்தின் திருவண்ணாமலை கிளை சார்பிலும் திருவண்ணாமலையில் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது.

பின்னர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருவண்ணாமலை கிளை மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். இந்திய மருத்துவ சங்க செயலாளர் தேவநாத் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இந்திய மருத்துவ சங்க திருவண்ணாமலை மாவட்ட சங்க தலைவர் அனுராதா, இணை செயலாளர் அருண்மொழியன், துணைத் தலைவர் மலர்கொடி, மூத்த டாக்டர்கள் குணசேகரன், கணேசன், சோமசுந்தரம் உள்பட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த சுமார் 250 கிளினிக் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலரும், மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளருமான ஸ்ரீதர் கூறியது:

"மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கும் வகையில், அதற்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜிப்மர், எய்ம்ஸ் ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் படித்த மாணவர்களை தவிர, எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு பின்னர் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவர்களாக பதிவு செய்ய முடியும்.

மேலும், இந்த நுழைவு தேர்வு வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி "ஆயூஸ்" என்ற ஆங்கில அலோபதிக்கான மூன்று ஆண்டுகள் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வகுப்புகள் அளித்து அனைத்து வழிமுறை மருத்துவத்தையும் செய்ய வழிவகை செய்துள்ளது.

முறையாக அறுவை சிகிச்சை படித்தவர்களாலே சில சமயங்களில் தவறுகள் நடக்கிறது. இந்த திட்டத்தினால் மருத்துவப் பணிகளின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் இன்னும் 10 வருடங்களில் மருத்துவ தரம் குறைய வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.