"நீட் தேர்வுக்கான தமிழக அரசின் அவசர சட்டம் செல்லாது" - வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பரபரப்பு பேட்டி!!
மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வு நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் ஒத்தி வைக்க பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு குறித்து பேசிவந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதைதொடர்ந்து இன்று டெல்லி சென்றுள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவசர சட்டத்துக்கான மசோதாவை ஒப்படைத்து பேசி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎஸ்இ மாணவர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் நளினி செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நீட் தேர்வுக்கு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அவசர சட்டம் கொண்டு வருவதாக அரசு கூறுவது பொய்யான தகவல். தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தால், கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அவசர சட்டம், சட்ட விரோதமானது. இவ்வாறு அவர் பேசினார்.