நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்; 230 பேர் அதிரடி கைது...
தேனி
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் 230 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்றனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி எஸ்.பி.ஐ. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் அங்கு வந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு காவலாளர்கள் அனுமதி மறுத்தனர்.
எனினும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி, கோம்பை, கூடலூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தேனி நேரு சிலை சிக்னல் அருகில் மறியல் செய்த மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 34 பேரையும், கூடலூரில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் உள்பட 14 பேரையும், கோம்பையில் ஒன்றிய செயலாளர் வேலவன் உள்பட 23 பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, போடி நகர், தென்கரை, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் மறியல் செய்ய முயன்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சின்னமனூரில் 20 பேரும், ஆண்டிப்பட்டியில் 20 பேரும், போடியில் 33 பேரும், தென்கரையில் 16 பேரும், கூடலூரில் 16 பேரும், கடமலைக்குண்டுவில் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்ப்புலிகள் கட்சியினர் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட 12 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 230 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.