தனியார் பள்ளிக்கு வந்த மர்ம சாக்கு மூட்டைகள்; உள்ளே என்ன இருந்தது? விசாரிக்க தயங்கும் காவல்துறை...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் லாரி மூலம் தனியார் பள்ளியின் பெயரில் வந்த மர்ம சாக்கு மூட்டைகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் இரண்டு இலட்சம் இருக்குமாம். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தாமல் உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவலாளர்கள் மெத்தனமாக உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விற்பனை முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், வழிபாட்டுத் தலங்களின் அருகேயே நடக்கிறது. ஆனால், இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
கடந்த மாதம் பரமக்குடியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு இரண்டு சாக்கு மூட்டைகள் வந்தன. இதனை வழக்கமாக லாரியில் இருந்து இறக்கிய சுமை துாக்கும் பணியாளர்கள் அப்பள்ளிக்குக் கொண்டுச் சென்று சேர்த்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் என்ன பார்சல்? என்று அறிந்துகொள்ள திறந்தபோது அதில் புகையிலையைக் கண்டதும் அலறிய ஊழியர்கள் இது தங்களது கிடையாது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும் அப்பள்ளி நிர்வாகம் சார்பில் பரமக்குடி நகர காவலாளர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இந்த புகாருக்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் கொடுத்தும் அந்த பண்டல் யாருக்கு வந்தது என்று விசாரணை செய்யாமல் உள்ளனர்.
இதுகுறித்து, "பள்ளியின் புகாரின் பேரில் அப்பண்டல்களை நீண்ட நாட்களுக்கு பின்னர் லாரி உரிமையாளரிடம் இருந்து காவலாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே, மெத்தனமாக இல்லாமல் உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவலாளர்கள் பரமக்குடியில் இதுபோன்ற பள்ளி அல்லது பொது நிறுவனங்களின் பெயரால் முறையற்ற செயல்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவலாளர் ஒருவர் கூறுகையில், "பள்ளியின் பெயர் கொண்ட பார்சல் வந்தது உண்மை தான். மதுரையில் இருந்து லாரி மூலம் அனுப்பியுள்ளனர். ஆனால், முறையான முகவரி இல்லை. மேலும் பார்சலை யாரும் கேட்டு வராத நிலையில், சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளரிடம் இருந்து நகர காவல் நிலையத்தில் கைப்பற்றி வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 21/2 இலடசம் ரூபாய் வரை இருக்கும்" என்று அவர் கூறினார்.