ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடி, காவலாளியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்தில் மது அருந்தி, எலுமிச்சை பழம், விபூதி வைத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Ramanathapuram Congress office : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் காவலாளியை அடித்து விரட்டி விட்டு கட்சி அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.
மேலும் கட்சி அலுவலகத்தில் மது அருந்திவிட்டு, எலுமிச்சை பழம் மற்றும் விபூதியை வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன என விசாரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இரு பிரிவாக இருந்ததாகவும், ஒரு பிரிவினரிடம் நீதிமன்ற உத்தரவின் படி மற்றொரு குழுவிடம் காங்கிரஸ் அலுவலகம் சில வாரங்களுக்கு முன்பாக ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல்
எனவே முன்பகை காரணமாக காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டிருக்குமோ என போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்தில் காவலில் இருந்த காவலாளியை தாக்கி துரத்தி விட்டு, மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து மது அருந்தியதோடு அலுவலகப் பொருட்களை சூறையாடிச் சென்றது ஜனநாயக அரசியல் பணியை அவமதிக்கும் செயலாகும்.
இத்தகைய தாக்குதல்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வன்முறை மற்றும் அராஜகம் எந்தக் காலத்திலும் ஜனநாயகக் குரலை அடக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.
காங்கிரஸ் அலுவலகத்தில் மது அருந்திய மர்ம நபர்கள்
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம், மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் கட்சி எந்த அச்சுறுத்தலுக்கும் இடமளிக்காது. மக்களின் உரிமைக்கும், ஜனநாயக மதிப்புகளுக்கும் எங்கள் போராட்டம் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்.


