அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது: நடிகர் ரஜினி
அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோக அலைகளை எழுப்பி உள்ளது. அனிதாவின் சாவுக்கு, நீட் தேர்வே காரணம் என்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் சாவுக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில், அனிதாவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது. விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா, என்னவெல்லாம் நினைத்தாரோ? அனிதாவின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.