மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; 30 பேர் கைது...
திருவாரூர்
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதில், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தனியரசன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் பிரபு, கோட்டூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, கோட்டூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனி, மன்னார்குடி நகர இளைஞரணி செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
"மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
முக்குலத்தோரை தேவர் என வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசும்பொன் தேவர் படம் வைக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகில் முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்துபுலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.