கள்ளக்காதலுக்கு இடையூறு இல்லாமல் இருக்க காதலனுக்கே மகளை திருமணம் செய்து வைத்த தாய்...
கள்ளக்காதலுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தனது 13 வயது மகளை, கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கொடுமை தேனியில் நடந்துள்ளது. சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்ன ஓபுலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லதா (38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். மனைவி லதாவின் கள்ளக்காதல் முத்துசாமிக்கு தெரியவரவே குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், தனது கள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்தால் எந்த இடையூறும் இல்லாமல் தங்களின் கள்ளக்காதல் தொடரும் என்று லதா நினைத்துள்ளார்.
எனவே தனது 13 வயது மகளை, தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க லதா முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி அன்று ராஜ்குமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
தனது மகளுக்கு திருமணம் நடந்தது குறித்து லதாவின் கணவர் முத்துசாமி, ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். முத்துசாமியின் புகாரைத் தொடர்ந்து, லதா, அவரது கள்ளக்காதலன் ராஜ்குமார், தமிழன், ஈஸ்வரி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.