திருச்சியில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாய்; மூன்றும் பெண் குழந்தைகள்! அடடே!
திருச்சி
கரூரைச் சேர்ந்த பெண்ணுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பஞ்சப்பட்டியைச் சேர்ந்த பொ. கருப்பசாமி (24). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கர்ப்பமடைந்த ஈஸ்வரிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் மூன்று குழந்தைகள் கருவில் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வந்தார் ஈஸ்வரி.
இந்த நிலையில், 2018, பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். எட்டாவது மாத மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் வீட்டிலிருந்த ஈஸ்வரிக்கு, கடந்த 18-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூன்று குழந்தைகள் கருவில் இருப்பதால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் நலமுடன் பிறந்தன. ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது அதிசயம் என்றால், மூன்றும் பெண் குழந்தையாக பிறந்தது மற்றொரு அதிசயம்.
குழந்தைகள் குறைந்த எடையில் இருப்பதால் இன்குபேட்டரில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.