பிறந்த பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாய்; ஏஜெண்டாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்...
சேலம்
சேலத்தில் பிறந்த பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு தாய் விற்றுள்ளார். இதற்கு அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் பெண் ஒருவர் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ளது நெசவாளர் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்த ராணி. இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள்.
பிரிந்து வாழும் ராணி, வேறொருவருடன் குடும்பம் நடத்தி கர்ப்பம் ஆனார. கடந்த மே மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ராணிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. நான்காவதாக மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் அந்த நபர் மருத்துவமனையிலேயே ராணியிடம், "நீ எனக்கு வேண்டாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் ராணி கண்ணீர் விட்டு அழுதார். இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனை துப்புரவு தொழிலாளியான ஜெயா என்பவர் ராணிக்க் ஆறுதல் கூறினார். மேலும் ராணியிடம், "தனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லை. அவருக்கு இந்த குழந்தையை விற்றுவிடலாம்" என்று கூறி சம்மதிக்க வைத்துள்ளார்.
அதன்பின்னர், ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஜெயா தனது உறவினரை அழைத்துக்கொண்டு சென்று ரூ.50 ஆயிரம் கொடுத்து ராணியிடம் இருந்து அந்த பெண் குழந்தை வாங்கிக் கொண்டார்.
குழந்தையை விற்ற பிறகு மன வேதனை அடைந்த ராணி, பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மருத்துவமனைகு வந்த ராணி, ஜெயாவிடம் சென்று, "இந்தாங்க நீங்க கொடுத்த பணம். எனக்கு என் குழந்தையை திருப்பு தாருங்கள்" என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா, ராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைப் பார்த்த மருத்துவமனையில் கூடியிருந்தவர்கள் உடனே புறக்காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவலாளர்கள் இதுகுறித்து ஜெயா மற்றும் ராணியிடம் விசாரித்தனர்.
காவலாளர்கள் தொடர்ந்து, குழந்தை யாருக்கு விற்கப்பட்டது? இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளன? குழந்தை உறவினருக்கு தான் விற்கப்பட்டதா? என்றெல்லாம் ஜெயாவிடம் விசாரித்து வருகின்றனர்.
துப்புரவு தொழிலாளி உதவியுடன் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர் என்ற தகவல் பரவியதால் மருத்துவமனையே பரபரப்புடன் காணப்பட்டது.