இரண்டு வருடங்களுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையம்; குற்றச் சம்பவங்களை தடுக்க மக்கள் கோரிக்கை...
திருவள்ளூர்
திருவள்ளூரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையத்தை திறந்து குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு தபால் நிலையம், வேளாண்மை விற்பனை நிலையம், தீயணைப்பு நிலையம், கூட்டுறவு பால் விற்பனை நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை விற்பனைக் கிடங்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், பேரம்பாக்கத்தில் இருந்து நாள்தோறும் அரக்கோணம், காஞ்சீபுரம், சுங்குவார்சத்திரம், திருவள்ளூர், கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம், பொன்னேரி, பூந்தமல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மக்களின் நலனுக்காக பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. அதில் காவலாளர்கள் தங்கி காலை, மாலை வேளையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்த காவல் உதவி மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை காவலாளர்கள் கண்காணிக்க முடியவில்லை.
எனவே, பேரம்பாக்கத்தில் பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த காவல் உதவி மையத்தை காலதாமதம் செய்யாமல் உடனே திறக்க வேண்டும். அதில், நிரந்தரமாக காவலாளர்கள் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.