Asianet News TamilAsianet News Tamil

விழுப்புரத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம். ஏன்?

More than 300 College Students in Villupuram Why?
More than 300 College Students in Villupuram Why?.
Author
First Published Feb 22, 2018, 7:40 AM IST


விழுப்புரம்

தினமும் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்தபடியே கல்லூரிக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள களமருதூர், செங்குறிச்சி, பரிக்கல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் நாள்தோறும் காலை தங்களது கிராமங்களில் இருந்து இலவச பேருந்து பயண அட்டை மூலம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வருவார்கள். பின்னர், அவர்கள் அங்கிருந்து விருத்தாசலத்துக்கு இயக்கப்படும் மூன்று அரசு பஸ்களில் கல்லூரிக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவார்கள்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் மற்ற இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலமைக்கு தள்ளப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவலாளர்கள் மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் மறியலை கைவிட்டு, கலைந்துச் சென்றனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு அரசு பேருந்துகளில் விருத்தாசலம் கல்லூரிக்கு புறப்பட்டனர். பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

அந்த பேருந்துகள் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் அந்த இரண்டு பேருந்துகளையும் சிறைபிடித்து, திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுரளி, மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவலாளர்கள், "சட்டத்துக்கு புறம்பாகவும், மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபடுவது தவறான செயலாகும். உங்களது கோரிக்கைகளை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரிகளிடம் கூறி தீர்வு காணுங்கள்" என்று அறிவுரை கூறினர்.

இதனை ஏற்ற மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து போக்குவரத்துக்கழக பணிமனை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios