பயிர்களை நாசம் செய்துவந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் காப்புகாட்டிற்கு விரட்டியடிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி...
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்துவந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் நொகனூர் காப்புகாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில், 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன.
தாவரக்கரையில் இருந்த யானைகள், கண்டகானப்பள்ளி பகுதியில் தொடர்ந்து விவசாய பயிர்களை நாசம் செய்துவந்த நிலையில் நேற்று பாப்பிரெட்டிபாளையம் கிராமம் அருகே, யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர், அங்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
யானைகளை விரட்டும் முயற்சி கைகொடுத்ததால் பாப்பிரெட்டிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், சவளகிரி சாலையை கடந்து சென்றன.
பின்னர், அந்த யானைகள் நொகனூர் காப்புக்காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டன. அங்கிருந்து மல்சோனை நோக்கி யானைகள் இடம் பெயர்ந்தன. தற்போது அந்த 30-க்கும் மேற்பட்ட யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.