புகார் கொடுத்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்...
நாமக்கல்
நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் எஸ்.வாழவந்தி ஊராட்சியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்பொழுது அப்பகுதியில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினருக்கும், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால், அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் நேற்று வெற்றுக் குடங்களுடன் நாமக்கல்லில் இருந்து பாலப்பட்டிச் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து மூலம் அப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கும் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் பரமத்தி காவல்துறை ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.