Monkeys in the residential area The people of the forest came out of the field ...

சிவகங்கை

சிவகங்கையில் குடியிருப்புப் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கைவிரித்ததால் மக்களே, பணம் வசூல் செய்து ஆட்களை அழைத்துவந்து குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்துக் காணப்பட்டது. குரங்குகள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி அட்டகாசம் செய்வதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருள்களை தூக்கிச் செல்வதும் என தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

இதுகுறித்து மக்கள், வனத்துறை, தாலுகா அலுவலகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், வனத் துறையினர் குரங்குகளைப் பிடிக்க தங்களிடம் நிதி இல்லை என்று பதிலளித்தது மக்களை அதிருப்தி அடைய செய்தனர். குரங்குகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மக்களும் கடுப்பாகினர்.

எனவே, அப்பகுதி மக்களே பணம் வசூல் செய்து, வனத்துறை அலுவலர்கள் மூலம் மணப்பாறையில் இருந்து குரங்கு பிடிக்கும் நபர்களை வரவழைத்தனர். பின்னர், அப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித் திரிந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டில் வலை வைத்து பிடித்தனர்.

இந்த குரங்குகளைப் பிடிக்க கூலியாக ரூ. 11 ஆயிரமும், பிடித்த குரங்குகளை வெளியில் கொண்டுபோய் விடுவதற்கு ஒரு தடவைக்கு ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளனர். மீதமுள்ள குரங்குகளையும் பிடித்து வருகின்றனர்.