பேருந்தில் பெண் பயணிடம் பணம் திருட்டு; கையும் களவுமாக சிக்கிய மூன்று பெண்கள் சிறையில் அடைப்பு...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து ரூ.4500 பணத்தை திருடிய மூன்று பெண்களை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி ராணி (32). இவர் இதே ஊரில் செயல்பட்டு வரும் மகளிர் சங்கத்தின் தலைவியாக இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சங்கத்தில் வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கிருஷ்ணகிரி - இராயக்கோட்டை சாலையில் உள்ள மாதேப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பேருந்தில் ஏறிச்சென்றபோது பையில் வைத்திருந்த ரூ.4500-ஐ பணத்தை பையோடு ஒரு பெண் திருடினார். இதனை உணர்ந்த ராணி 'திருடன் திருடன்' என்று அலறினார். அப்போது பணத்தைத் திருடிய அந்த பெண் தன்னுடன் வந்த மற்ற இரண்டு பெண்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தார்.
ராணியின் அலறலைக் கேட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் அந்த மூன்று பெண்களையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தாலுகா உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் வழக்கு பதிந்து பணத்தைத் திருடி கெலமங்கலம் முனுசாமி மனைவி சந்திரா (38), ஜொனபெண்டாவைச் சேர்ந்த முனுசாமி மனைவி கலா (22), கர்நாடகா மாநிலம் மாலூர் சீனிவாசன் மனைவி ஜோதி (30) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
அதன்பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைத்தனர்.