Modi government works for corporate bosses - Sudhakar Reddy
திருச்சி
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய மோடி அரசு பல்லக்கு தூக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
“இந்தியாவை மீட்போம், தமிழகம் காப்போம்” என்றத் தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நீலகிரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவாரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களில் பிரச்சாரம் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் சுரேஷ் வரவேற்றுப் பேசினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:
“விவசாயிகள் டெல்லியில் 42 நாள்களாக போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்கள் குறைகள் பற்றி பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. விவசாயிகளுக்கு எதிராக பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது.
வருமான வரித்துறை மூலம் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் பாரதீய ஜனதா கட்சி கொண்டு வந்துள்ளது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய மோடி அரசு பல்லக்கு தூக்குகிறது. விவசாய தொழிலாளர்களை பாஜக நசுக்குகிறது” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் புறநகர் மாவட்டச் செயலாளர் கணேசன் நன்றித் தெரிவித்தார்.
