செந்தில்பாலாஜி , ஏ.கே.போஸ், ரங்கசாமி இன்று பதவி ஏற்பு - தலைமை செயலகத்தில் சபாநாயகர் பதவி பிரமாணம்
தஞ்சை அரவக்குறிச்சி திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் இன்று எம்.எல்.ஏக்களாக பதவி ஏற்கின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி,மற்றும் உறுப்பினர் காலமானதால் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதி தஞ்சையில் அதிமுக சார்பில் ரங்கசாமியும் , திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் , அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் , திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் , திமுக சார்பில் சரவணனும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை கடந்த 22ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூர் தொகுதியில் எம்.ரெங்கசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மூன்று பேரும் உடனடியாக பதவியேற்கவில்லை. இந்நிலையில்,இன்று நிறைந்த அமாவாசை முகூர்த்த நாள் என்பதால் மூன்று எம்எல்ஏக்களும் இன்று மாலை 4-30 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்து பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.