"கொசஸ்தலை தடுப்பணை விவகாரம்... கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்" - எம்எல்ஏ நரசிம்மன்
கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அம்மா அணி எம்.எல்.ஏ. நரசிம்மன் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆறு தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்ட விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.
கொசஸ்தலை ஆற்றில் இருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்து சேர்கிறது. இந்த நிலையில் ஆந்திர அரசு, லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் துவங்கி இருக்கிறது. ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசஸ்தலை ஆற்றின் மூலமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
தடுப்பணைகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும். தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருத்தணி அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
உள்ளாட்சி மானியக் கோரிக்கையின்போது, கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை குறித்து தீர்மானம் கொண்டு வரப்படும் திருத்தணி அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் கூறியுள்ளார்.