முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது: அண்ணாமலை சாடல்!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி மொழி திணிப்பை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், இந்திய மக்கள் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஹிந்தியை ஏற்றுக் கொண்டாகத் தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் பேசியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு உள்பட ஹிந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமித் ஷாவின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!” என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது. எனவே, அமித் ஷா சொன்னது அவருக்கு புரிந்திருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலையின் யாத்திரை மதுரை வந்துள்ளது. யாத்திரையின் போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், “அமித்ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். ஐந்தாவது தமிழ்ச்சங்கம் எடுத்தவர் பிரதமர் மோடி தான். தமிழ் மொழிக்கு பிரதமர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கு ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. பிரதமர் மோடி ஹிந்தி தொன்மையான மொழி என பேசியிருக்கார் என்றால் அந்த ஆதாரத்தை காட்டுங்கள். தமிழ் மொழி போல எந்த மொழியும் கிடையாது என பிரதமர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.” என்றார்.
பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறாரா? காங்கிரஸ் கேள்வி!
மேலும், “100 கோடி ரூபாய்க்கு கலைஞர் நூலகம், பேனா சிலை என செலவு செய்யும் திமுக அரசு ஆனால் கரும்பு ஆலை திறக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் 3லட்சத்து 50ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள். ஆனால் குருப் 4 தேர்வு முடிந்து 13 மாதம் ஆகிறது அதன் முடிவை கூட வெளியிட முடியவில்லை, 2 ஆண்டுகளில் 2ஆயிரம் பணி தான் கொடுத்துள்ளார்கள். ஆனால் திமுக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. தனது குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறது. எதிர்வரவுள்ள தேர்தலில் திமுக தோல்வியடையும்.” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.