மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அதில் இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (23) ஆகிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில கிரேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளைஞர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர் யார்? மணிப்பூர் முதல்வருக்கு எந்த இடம்?

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.